‘அனிமல்’ இயக்குநர் உடன் ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு - காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

மும்பையில் ‘அனிமல்’ இயக்குநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள படம் ‘தேவாரா’. இதன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் இன்று (செப்.10) மாலை வெளியாகவுள்ளது. கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சைஃப் அலி கான், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்திருக்கிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘தேவாரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக படக்குழு மும்பை சென்றிருக்கிறது. அங்கு ‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்

இந்தச் சந்திப்பு குறித்து, “நட்பு ரீதியிலான சந்திப்புதான். இதில் இருவருமே தங்களுடைய அடுத்டுத்த படங்கள் மற்றும் சினிமா மீதான பார்வை குறித்து விவாதித்தார்கள். மேலும், இருவருமே இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசினார்கள். வெவ்வேறு படங்களில் மும்முரமாக இருந்தாலும், வரும் காலத்தில் இருவரும் இணைய வாய்ப்பு இருக்கிறது” என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘அனிமல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’, ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல் பார்க்’ ஆகிய படங்களை இயக்கவுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்தே தனது அடுத்த படம் குறித்து முடிவு செய்ய இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE