‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன் மீது ஹைதராபாத் போலீஸ் வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுபோதையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவா சென்ற விமானத்தில் அவர் பயணித்துள்ளார். இந்த சூழலில் சனிக்கிழமை மாலை விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் வாக்குவாதம் மேற்கொண்டதோடு தகராறும் செய்துள்ளார்.

சிஐஎஸ்எப் வீரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அவரை போலீசார் அனுப்பியுள்ளனர்.

நடிகர் விநாயகன், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வர்மன் என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். மலையாளத்தில் வெளியான கம்மாட்டிப்பாடம் படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE