‘கேம் சேஞ்சர்’ படத்தை முன்வைத்து ரசிகர்கள் ட்ரோல்: தமன் வேண்டுகோள்

By ஸ்டார்க்கர்

‘கேம் சேஞ்சர்’ வெளியீடு குறித்து ரசிகர்களின் அதிர்ச்சியூட்டும் செயலால் இசையமைப்பாளர் தமன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’.

தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரபூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இருந்து ‘ஜருகண்டி’ பாடல் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. அதைத் தாண்டி எந்தவொரு அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. மேலும், ‘இந்தியன் 2’ படுதோல்வியால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் குறைத்திருக்கிறது.

அப்டேட் எதுவுமே இல்லாத காரணத்தினால் ராம்சரண் ரசிகர்கள் படக்குழுவினரை கடுமையாக சாடத் தொடங்கினார்கள். இணையத்தில் படக்குழுவினருக்கு எதிரான ட்ரெண்டை உருவாக்கி கருத்துகளைக் கொட்டினார்கள்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் தமன், “எதிர்மறையான கருத்துகளை பரப்புவது அல்லது தொடங்குவதால் என்ன பயன்? இது திரைப்படத்தை மட்டுமே காயப்படுத்தும். எங்களின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் கடந்த 2 ஆண்டுகளாக படத்தின் தகவல்களை உங்களுக்கு பிரம்மாண்டமாக அளிக்க பாதுகாத்து வருகிறது. ரசிகர்கள் அதற்கு மதிப்பளித்து, தயவுகூர்ந்து நேர்மறையான கருத்துகளை இதயத்திலிருந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அப்போது மட்டுமே நான் அனுபவித்த மகிழ்ச்சியை உங்களுக்கு கொண்டு வர முடியும். நடிகர்கள் குழு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து இதற்கு பெரும் பணம் மற்றும் நேரம் போடப்பட்டுள்ளது. நீங்கள் செய்யும் விஷயங்கள் படத்தினை மிகவும் மோசமாக பாதிக்கும். லவ் யூ நண்பர்களே, நாம் குறைந்தவர்கள் இல்லை, வலுவாக வருவோம். எங்களது அடுத்த அப்டேட் சரவெடியாக இருக்கும். இந்த மாதம் நிச்சயம் வரும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE