“என்னை விட எஸ்.ஜே.சூர்யாவுக்கு பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சியே” - நானி வெளிப்படை

By ஸ்டார்க்கர்

‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் என்னை விட எஸ்.ஜே.சூர்யா பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சியே என்று நடிகர் நானி தெரிவித்திருக்கிறார்.

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’. தமிழில் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் தயா என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. விமர்சகர்கள் உள்ளிட்ட அனைவருமே எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பினை புகழ்ந்து தள்ளினார்கள். அவருடைய நடிப்பால் மட்டுமே இந்தப் படம் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

இதனிடையே ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா கலந்துக் கொள்ளவில்லை. இந்த விழாவில் நானி பேசும்போது, “இந்தக் கதை சூர்யாவின் கதையைவிட தயாவின் கதை என்று நம்புகிறேன். இதை படப்பிடிப்பின் போதே இயக்குநரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை நம்பவில்லை. இப்போது நடந்திருப்பதில் மகிழ்ச்சியே.

நான் நடித்த படத்தில் என்னை விட எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைத்திருப்பது இந்தப் படத்திலிருந்து நான் எடுத்துச் செல்லும் பெரிய விஷயம். எனக்கு இது பெரும் மகிழ்ச்சி மட்டுமன்றி வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது” என்று நானி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE