மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரில் மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் அவர் மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் சுரண்டல்களை வெளிக்கொண்டு வந்தது ஹேமா கமிட்டி அறிக்கை. மலையாள நடிகைகள் பட வாய்ப்புக்காக பல முறை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வாக பல நடிகைகளும் வெளியில் வந்து தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில் மலையாள நடிகர் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை மினு முனீர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயசூர்யா மீது கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, 354,354ஏ, 509 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டம் தொடுபுலாவில் நடந்த படப்பிடிப்பின்போது, நடிகர் ஜெயசூர்யாவால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை ஒருவர் காவல் துறை டிஜிபிக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். இந்த இ-மெயில் அடிப்படையில் திருவனந்தபுரத்தின் கரமனா போலீஸார் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 சி-யின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 48 மணி நேரத்தில் நடிகர் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE