“மாற்றத்துக்கான தொடக்கம் இது!” - சமந்தா கருத்து @ ஹேமா கமிட்டி அறிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: “குறைந்தபட்சம் மரியாதையான, பாதுகாப்பான பணிச் சூழல் ஏற்பட வேண்டுமென்றால், அதற்காக இன்னும் பலரும் இணைந்து போராட வேண்டும். இருப்பினும் மாற்றத்துக்கான தொடக்கமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நான் பல ஆண்டுகளாக கேரளாவில் செயல்பட்டு வரும் ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) அமைப்பை பின் தொடர்ந்து வருகிறேன். அவர்கள் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் பயணம் எப்படியாக இருந்தாலும், நிச்சயம் எளிதானதல்ல. தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சத்துக்கு வந்திருப்பதற்கு WCC-க்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். குறைந்தபட்சம் மரியாதையான, பாதுகாப்பான பணிச் சூழல் ஏற்பட வேண்டுமென்றால், அதற்காக இன்னும் பலரும் இணைந்து போராட வேண்டும். இருப்பினும் மாற்றத்துக்கான தொடக்கமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு கொச்சியில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல், பாலின சமத்துவமின்மை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘விமன் சினிமா கலெக்டிவ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தான் ‘ஹேமா கமிட்டி’ உருவாக காரணமாக இருந்தது. அத்துடன் 2019-ம் ஆண்டு அறிக்கை முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்பிக்கப்பட்டு, கிடப்பில் கிடந்த நிலையில், அதனை வெளியில் கொண்டு வர அழுத்தம் கொடுத்ததும் இந்த அமைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE