மலையாள சினிமாவில் தொடரும் பாலியல் புகார்கள்: இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் ராஜினாமா

By செய்திப்பிரிவு

கொச்சி: மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும்மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. அதை, கடந்த 2019-ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்தது. 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த இந்த அறிக்கை, தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் சில தினங்களுக்கு முன் வெளியானது.

அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல டைரக்டரும், மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பரபரப்பு புகார் கூறினார். இதை அவர்மறுத்திருந்தார். இருந்தும் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி பலாத்காரம் செய்ததாகக் கூறியிருந்தார். நடிகர் ரியாஸ் கான் மீது நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

த்ரிஷ்யம் படத்தில் நடித்த ஹன்சிபா ஹசன், சோனியா மல்ஹர் உட்பட பலர் மலையாள திரைத்துறையினர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர். இது அங்கு நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.

இந்நிலையில், சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித்தும் நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து சித்திக்கும் ராஜினாமா செய்துள்ளனர். சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பியுள்ளார்.

இவர்களின் ராஜினாமாவை மலையாள திரைத்துறையினர் சிலர் வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE