“நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்?” - விவாகரத்து வதந்தியால் பாவனா ஆதங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “நான் விவாகரத்து பெற்று தனிமையில் இருக்கிறேன் என நினைக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் நினைப்பது தவறு என்று நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்” என நடிகை பாவனா ஆதங்கமாக பேசியுள்ளார்.

2017-க்குப் பின் 5 வருட இடைவெளி. அதன்பிறகு 2023-ம் ஆண்டு வெளியான ‘Ntikkakkakkoru Premondarnn’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரையுலகத்துக்கு திரும்பினார் நடிகை பாவனா. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹன்ட்’ (hunt) வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்நிலையில், இந்த இடைவெளி குறித்து பேசியுள்ள நடிகை பாவனா, “நான் மலையாளத்தில் படம் நடிக்கவில்லை என்றாலும், கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். மலையாள படங்களிலிருந்து எனக்கு நிறைய ஆஃபர்கள் வந்தது. ஆனால் நடிக்க நான் தயாராக இல்லை.

மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்ப வேண்டுமா என யோசித்தேன். என்னுடைய நலம் விரும்பிகள் நல்ல ஆஃபர்களை நிராகரிக்க வேண்டாம் என வலியுறுத்தினர். அடுத்து தான் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் 2 மலையாள படங்களில் நடிக்கிறேன். ஒன்று காமெடி. மற்றொன்று த்ரில்லர்” என்றார்.

மேலும், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு என்னுடைய தொழிலை வரையறுக்க விரும்பவில்லை. நான் சமூக வலைதளங்களில் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை.

ஆனால், நான் ஏன் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதில்லை என கேள்வி எழுப்புகிறார்கள். அதனாலேயே நான் விவாகரத்து பெற்று தனிமையில் இருக்கிறேன் என நினைக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் நினைப்பது தவறு என்று நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அதற்காக நான் ஒவ்வொரு முறையும் என்னுடைய கணவரிடம் சென்று வாருங்கள், நாம் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்புபவர்களுக்கு காட்டலாம் என சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE