கொச்சி: 70-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், மம்மூட்டி நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ மற்றும் 'ரோர்ஷாக்’ ஆகிய இரு படங்களும் விருதுக் குழுவுக்கு அனுப்பப்படவே இல்லை என்று மலையாள இயக்குநரும் தேசிய விருதுக் குழுவின் தென்னிந்திய உறுப்பினருமான பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், “ஆட்டம் போன்ற படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தாலும், மம்மூட்டிக்கு விருது கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது. ’காந்தாரா’ படத்துக்கு விருது கொடுத்த மத்திய அரசு மம்மூட்டியை புறக்கணித்து விட்டதாக பலரும் கமெண்ட் செய்கின்றனர். ஆனால் அவரது படங்கள் எதுவும் விருதுக் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பது அவர்களுக்கு தெரியாது.
சமூக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது புத்திசாலித்தனம் அல்ல. மம்மூட்டி போன்ற ஒரு மகா நடிகனை கவுரவிக்கும் வாய்ப்பை மலையாள திரையுலகம் தவற விட்டுவிட்டது” இவ்வாறு பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
மம்மூட்டியின் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ மற்றும் 'ரோர்ஷாக்’ இரு படங்களும் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டவை. குறிப்பாக மம்மூட்டியின் நடிப்பு பேசப்பட்டது. இதில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ ஓடிடியில் வெளியாகி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
» ‘காலம் கைகொடுக்கவில்லை, என் விதியும்தான்’ - தகுதி நீக்கம் குறித்து மவுனம் கலைத்த வினேஷ் போகத்
» ‘வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுவது மூலம் தமிழக அரசுக்கு ரூ.10.20 கோடி வருவாய்’
வாசிக்க > 70-வது தேசிய விருதுகள்: ‘பொன்னியின் செல்வன் 1’-க்கு 4 விருதுகள், சிறந்த நடிகை நித்யா மேனன்!