“வெறுப்பு பிரச்சாரமாக இதை மாற்ற வேண்டாம்” - ஆசிஃப் அலி வேண்டுகோள் 

By செய்திப்பிரிவு

கொச்சி: “கண்ணீர் விடாத குறையாக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். எனக்கு ஆதரவளிப்பதாக கூறி, அவருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரமாக இதை மாற்ற வேண்டாம். அவரது வலியை என்னால் உணர முடிகிறது” என இசையமைப்பாளர் ரமேஷ் நாரயண் குறித்து மலையாள நடிகர் ஆசிஃப் அலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆசிஃப் அலி, “அது தவறான புரிதலால் நிகழ்ந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் குழப்பத்தால் இசையமைப்பாளர் தடுமாறிப்போனார். நீங்கள் வீடியோவைப் பார்த்தால் தெரியும் எனக்கு சொல்லப்பட்ட வேலையை நான் செய்தேன். விருதை அவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து வந்துவிட்டேன். எனக்கு கிடைத்த அன்பையும், ஆதரவையும் அறிந்து தான் பூரிப்படைந்தேன். அந்த சம்பவம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், எனக்காக, என்னை ஆதரிக்க ஏராளமான மலையாளிகள் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நெகிழ்ந்தேன்” என்றார்.

மேலும், “இசையமைப்பாளர் ரமேஷ் நாரயணிடம் இன்று காலை பேசினேன். அவர் நேற்று என்னுடன் பேச தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் நேற்று என்னுடைய மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். காரணம் ஊடகத்தினர் தொடர்ந்து தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக கேட்டனர். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்பதால் தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டேன்.

இசையமைப்பாளரின் கலங்கிய குரல் என் மனதை உடைத்துவிட்டது. கண்ணீர் விடாத குறையாக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். எனக்கு ஆதரவளிப்பதாக கூறி, அவருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரமாக இதை மாற்ற வேண்டாம். அவரது வலியை என்னால் உணர முடிகிறது. அவருக்கு விருது வழங்கியதை எண்ணி நான் மகிழ்கிறேன்” என்றார்.

பின்னணி: கொச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘மனோரதங்கள்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆசிஃப் அலி இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணுக்கு விருது வழங்கினார். அப்போது அவர் விருதை வாங்க மறுத்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதையடுத்து ரமேஷ் நாராயண் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து இன்று ஆசிஃப் அலி இது தொடர்பாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE