தர்ஷனின் மனைவி நடிகை பவித்ரா அல்ல‌: சட்டப்பூர்வமான மனைவி கமிஷனருக்கு கடிதம்

By இரா.வினோத்


பெங்களூரு: கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகை பவித்ரா கவுடாவும் நடிகர்தர்ஷனும் கணவன், மனைவி அல்ல என தர்ஷ‌னின் சட்டப்பூர்வமான மனைவி விஜயலட்சுமி பெங்களூரு மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா, பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி நேற்று நகரகாவல்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``செய்தியாளர் சந்திப்பில் நடிகை பவித்ரா கவுடாவை, தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டீர்கள். அது தவறானது. தர்ஷனின் சட்டப்பூர்வமான மனைவி நான் மட்டுமே என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நீங்கள் தவறாக குறிப்பிட்டதை தொடர்ந்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வராவும், ஊடகங்களும் பவித்ரா கவுடாவைமனைவி என்றே கூறி வருகின்றனர். பவித்ரா கவுடாவுக்கு சஞ்சய் சிங் என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார்.

இந்த உண்மை போலீஸாரின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். பவித்ரா கவுடாவும் தர்ஷனும் கணவன் மனைவி அல்ல. அவர் எனது கணவரின் தோழி மட்டுமே. அதுவும் தொழில் சார்ந்த நட்பு மட்டுமே அவர்களுக்குள் இருந்தது''என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பவித்ரா கவுடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் 10 ஆண்டு கால உறவை நிறைவு செய்துள்ளதாக பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE