அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள்

By செய்திப்பிரிவு

கொச்சி: மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களுக்கு எதிரான பண மோசடி வழக்கை கையிலெடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை. கொச்சியில் உள்ள அலுவலகத்தில் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனியிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடியை வசூலித்தது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் அளித்த புகாரின் பெயரில் மரடு காவல்நிலையத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

அந்த புகாரில், “நான் இப்படத்துக்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். படத்தின் தயாரிப்பாளர்கள், படம் வெளியான பிறகு, படத்தின் லாபத்தில் இருந்து 40 சதவீத தொகையை பங்காக தருகிறேன் என கூறியிருந்தார்கள். நானும் காத்திருந்தேன். ஆனால், எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை” என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது இந்த பணமோசடி வழக்கை அமலாகத்துறை கையிலெடுத்து விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் அமலாகத்துறை விசாரணை நடத்தியுள்ளது. தொடர்ந்து மற்ற தயாரிப்பாளர்களான சவுபின் ஷாயிர், பாபு ஷாயிர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE