சென்னை: கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை நஸ்ரியா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அவருடன் பசில் ஜோசஃப் இணைந்து நடிக்கிறார்.
மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா, நானி நடிப்பில் வெளியான ‘அன்டே சுந்தராணிகி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு 2 ஆண்டுகளாக நஸ்ரியா நடிக்கும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. அவரின் கம்பேக்குக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் நடிக்கும் புதிய மலையாளப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சூக்ஷமதர்ஷினி’ (Sookshmadarshini) என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பசில் ஜோசஃப் நடிக்கிறார்.
எம்.சி.ஜித்தின் இயக்கும் இப்படத்தை சமீர் தாஹிர், ஷைஜு காலித் இணைந்து தயாரிக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் படத்துக்கு இசையமைக்கிறார். தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ், கோபன் மங்காட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
» “மம்மூட்டி நடிப்பதாக இருந்தது... ‘அஞ்சாமை’ கதையை கேட்டு அழுதுவிட்டேன்!” - விதார்த் பகிர்வு
» பார்வதி, ஊர்வசியின் ‘உள்ளொழுக்கு’ பட முதல் தோற்றம் வெளியீடு
மேலும், இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை பொறுத்தவரை கார்ட்டூன் வடிவில் நஸ்ரியா மற்றும் பசில் ஜோசஃப் படங்கள் வரையபட்டுள்ளன.இந்தப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.