காவல் துறையினரிடம் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம்: ரீலா... ரியலா?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: காவல் துறையினருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்தின் புரமோஷன் நடவடிக்கையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக 2021-ல் வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹைதராபாத்தில் காவல் துறையிடம் காரில் அமர்ந்துகொண்டு நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

காரில் வந்துகொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜை இடைமறிக்கும் காவல் துறையினர், கார் டிக்கியை திறக்கும்படி கூறுகின்றனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து காவலர்களிடம் வாக்குவாதம் செய்கிறார். மேலும், தன்னிடம் ஆவணங்கள் சரியாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் அவர் வீடியோவை ரெக்கார்ட் செய்பவரையும் கண்டிக்கிறார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால், இது அவர் நடித்து வரும் தெலுங்கு படத்தின் புரொமோஷனலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நிவேதா பெத்துராஜை பொறுத்தவரை, அவர் தற்போது தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘சொப்பன சுந்தரி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் கதை கார் ஒன்றை மையமாக வைத்து நகரும். ப்ளாக் காமெடியான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் நிவேதா நடிக்கிறார். ஆக காரை மையமாக வைத்த கதை என்பதால் இந்த வீடியோ பட புரொமோஷலாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE