மேடையில் அஞ்சலியை தள்ளினாரா பாலகிருஷ்ணா? - நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ பட நிகழ்வின்போது மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள படம் 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி'. இதில் அஞ்சலி, நேஹா ஷெட்டி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று (மே 28) நடைபெற்றது. இதில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கே நின்று கொண்டிருந்த அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்க சொன்னார். ஆனால் இருவரும் அதை கவனிக்காமல் இருந்ததால் தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து தள்ளினார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி, பின்னர் சுதாரித்துக் கொண்டு சிரித்தார். கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் கூட்டமும் இதை பார்த்து ஆராவாரம் செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அஞ்சலி அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிரித்தாலும், மேடையில் பாலகிருஷ்ணா இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று கூறுகின்றனர். இன்னொரு பக்கம் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள், அவர் இதனை விளையாட்டாக செய்ததாக தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE