சனல் குமார் சசிதரன் Vs டோவினோ தாமஸ் - ‘வழக்கு’ பட ரிலீஸ் பிரச்சினையில் நடப்பது என்ன?

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: “தனது ஸ்டார் அந்தஸ்து காரணமாக ‘வழக்கு’ படத்தை வெளியிட டோவினோ தாமஸ் தயங்குகிறார்” என அப்படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு டோவினோ தாமஸ் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

மலையாள சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் சனல் குமார் சசிதரன். அவரின் ‘ஒழிவுதிவசத்தே காளி’ (Ozhivudivasathe Kali) சிறந்த படத்துக்கான மாநில விருதை பெற்றது. ‘செக்ஸி துர்கா’, ‘சோழா’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அவரது படங்கள் பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவது வழக்கம். அந்த வகையில் அவர் இயக்கத்தில் கடைசியாக உருவான படம் ‘வழக்கு’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் நடித்திருந்தார். மேலும் அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு உருவான இப்படம் கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

2022 ஜூலையில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கபட்டது. ஆனால், வெளியாகவில்லை. இந்நிலையில் சனல்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “வளர்ந்து வரும் தனது ஸ்டார் அந்தஸ்து காரணமாக டோவினோ தாமஸ் ‘வழக்கு’ படத்தை வெளியிட தயங்குகிறார்” என குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள டோவினோ தாமஸ், “பலரும் சனல்குமாருடன் பணிபுரிய வேண்டாம் என்று என்னை எச்சரித்தனர். தொடக்கத்தில் எனக்கு ‘வழக்கு’ படம் பெரிய அளவில் உள்ளிழுக்கவில்லை. ஆனால், அதன்பிறகு படப்பிடிப்பின்போது நான் மிகவும் ரசித்து பணியாற்றினேன். இன்று ‘வழக்கு’ ஒரு சிறந்த படம் என நான் நம்புகிறேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்றது.

ஆனால், அங்கு வந்த பார்வையாளர்கள் என்பவர்கள் வேறு. அவர்களின் ரசனை வேறு. இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என சனல்குமார் கூறியபோது, அது வணிக ரீதியாக பலனளிக்காது என்று என்னுடைய கருத்தை அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் என்னுடைய அச்சத்தை தவறாகப் புரிந்துகொண்டார். அதாவது, இந்தப் படம் வெளியானால் என்னுடைய ஸ்டார் இமேஜ் பாதிக்கப்படும் என அவர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்.

சொல்லப்போனால் நான் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடலாம் என்ற யோசனையை அவரிடம் கூறினேன். ஓடிடி தளங்கள் படைப்புரிமையை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், சனல் அதற்கும் மறுத்துவிட்டார்” என விளக்கம் அளித்தார்.

இந்த மோதலின் உச்சகட்டமாக சனல்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மொத்த படத்தையும் ரிலீஸ் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “படத்தை பார்க்க விரும்புபவர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி படத்தை பார்க்கலாம். படம் ஏன் வெளியே வரவில்லை என்பது புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். இந்தப் படத்துக்காக ரூ.27 லட்சத்தை டோவினோ முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE