ட்ரோல் ஆன ‘ஃபேமிலி ஸ்டார்’ படம்: போலீஸில் விஜய் தேவரகொண்டா புகார்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் கடந்த வாரம் (ஏப்.5) வெளியாகி இருந்தது. இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை ட்ரோல் செய்பவர்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பு காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் தெரிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் மற்றும் இந்தப் படம் வெற்றி பெறக் கூடாது என விரும்பாதவர்கள் படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபர் மற்றும் குழு என இணைந்து இதனை செய்கின்றனர் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவுகள் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் கிளாஸ் கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வாழ்வில் வரும் காதல், அதனால் ஏற்படும் மாற்றங்கள் என இந்தப் படத்தின் கதை நகர்கிறது.

‘கீதா கோவிந்தம்’ படத்தின் இயக்குனர் பரசுராம், இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. மிருணாள் தாக்குர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE