பன்முகத்திறமை கொண்ட ஃபர்ஹான் அக்தரை, முதன்முதலில் தெலுங்கில் பாட வைத்திருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஃப்ர்ஹான் அக்தர். மகேஷ் பாபு நடித்துள்ள ‘பரத் அனே நேனு’ தெலுங்குப் படத்தில் இவரைப் பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். அவர் தென்னிந்திய மொழிகளில் பாடுவது இதுவே முதன்முறை.
“ஃபர்ஹானுடைய குரல் எனக்குப் பிடிக்கும். எப்படியாவது ஒரு பாடலாவது தென்னிந்திய மொழியில் அவரைப் பாடவைத்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘பரத் அனே நேனு’ படத்திற்காக ‘ஐ டோண்ட் நோ...’ பாடலைக் கம்போஸ் செய்யும்போதே, இந்தப் பாடலை ஃபர்ஹானைத்தான் பாடவைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.
அவரைத் தொடர்பு கொண்டபோது, ‘எனக்குத் தெலுங்கு தெரியாதே...’ என்று தயங்கினார். அவரை சமாதானப்படுத்திப் பாடவைத்தபோது, அவ்வளவு அற்புதமாகப் பாடினார். கடந்த வாரம் வெளியான இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். ஃபர்ஹானுடன் என் இசைப் பயணம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.