4 நாளில் ரூ.50 கோடி: ‘ஆடுஜீவிதம்’ சாதனை

By செய்திப்பிரிவு

கொச்சி: மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘ஆடுஜீவிதம்’. பிளஸ்ஸி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் கடந்த வியாழக்கிழமை வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வளைகுடா நாட்டுக்கு பிழைக்கப் போன இளைஞன், அடிமையாக ஆட்டுப்பட்டிக்குள் சிக்கிக் கொண்டு,தப்பிக்க போராடும் சர்வைவல் த்ரில்லர் படமான ஆடுஜீவிதம், முதல் நாளிலிருந்தே வசூல் குவித்து வருகிறது. உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.16 கோடி வசூலித்த இந்தப் படம், வெளியான 4 நாட்களிலேயே ரூ.50 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் விரைவாக ரூ.50 கோடியை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது.

இதற்கு முன் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படம் அந்த சாதனையைப் பெற்றிருந்தது. ஆடுஜீவிதம் விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டும் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE