எனக்கு இதெல்லாம் சற்று படபடப்பைத் தருகிறது: ப்ரியா பிரகாஷ் வாரியர்

எனக்கு இதெல்லாம் சற்று படபடப்பைத் தருகிறது என்று 'ஒரு அதார் லவ்' படத்தின் ப்ரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்திருக்கிறார்.

மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்திலிருந்து 'மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரத்தை கடந்திருக்கிறது. மேலும், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. மோகன்லால், துல்கர் சல்மான், அனுஷ்கா உள்ளிட்ட பலரின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை ப்ரியா பிரகாஷ் வாரியர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு குறித்து ப்ரியா பிரகாஷ் வாரியர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

'மானிக்க மலராயா பூவி' பாடல் இந்தளவுக்கு ஹிட்டாகும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவேயில்லை. நன்றாக இருந்தது என்று பாராட்டினார்களே தவிர இவ்வளவு பெரியதாக பேசப்படும் என்றெல்லாம் தெரியாது. தேசிய அளவில் பலருக்கு என்மேல் ஈர்ப்பு வந்ததில் மிகவும் மகிழ்ச்சிதான். இதெல்லாம் புதிதாக இருக்கிறது.

இயக்குநர், நாயகனுக்கும் எனக்கும் நடுவில் அழகாக எதாவது வேண்டும் என்று நினைத்தார். என்னால் அந்த புருவத்தை தூக்கி, கண்ணடிக்க முடியுமா என்று கேட்டார். முயற்சித்துப் பார்க்கிறேன் என்று சொன்னேன். அப்படித்தான் அப்பாடலில் இடம்பெற்றுள்ள என் காட்சி படமாக்கப்பட்டது. முன்னாடியே எந்த திட்டமும், பயிற்சியும் இல்லை. அப்போது படப்பிடிப்பில் முடிவு செய்த விஷயம் அது.

இப்போது நான் பெண்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இதெல்லாம் சற்று படபடப்பைத் தருகிறது. சமூகவலைத்தளத்தில் இவ்வளவு பேர் பின் தொடரும்போது, அது பொறுப்பாக மாறுகிறது. என்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் படம் வெளியாகும் போது அது அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். என்னால் முடிந்த சிறந்த நடிப்பை தருவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

'ஒரு அதார் லவ்' படத்தின் டீஸரையும் ப்ரியா பிரகாஷ் வாரியரின் கதாபாத்திரத்தை வைத்தே வெளியிட்டு இருக்கிறது படக்குழு. அதிலும் இவருடைய முகபாவனைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமூகவலைத்தளத்தில் எழுந்துள்ள எதிர்பார்ப்பால், படத்தின் டப்பிங் உரிமையைக் கைப்பற்றுவதற்கும் கடும் போட்டி நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE