திரைத்துறைக்குள் அடிஎடுத்துவைக்கும்போதே சர்ச்சைகளை எதிர்கொள்வது பதற்றத்தை அளிக்கிறது என ப்ரியா பிரகாஷ் வாரியர் கூறியுள்ளார்.
மலையாளத்தில் 'ஒரு அடார் லவ்’ படத்திலிருந்து 'மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை கோடிக்கணக்கானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.
இந்நிலையில், 'மானிக்க மலராயா பூவி' பாடல் முஸ்லிம் சமூகத்தின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தையும், அவரின் மனைவி கதீஜா ஆகியோருக்கும் அவதாறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டின.
நடிகை பிரியா பிரகாஷ், இயக்குநர் உமர் அப்துல் வகாப், தயாரிப்பாளர் ஜோசப் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தன் மீதான கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப்ரியா தரப்பில் கோரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம் கான்வாலிகர், டிஓய் சந்திரசூட் ஆகியோர் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், படத்தயாரிப்பாளர் குழு அனைவர் மீதான கிரிமனல் நடவடிக்கைக்கும் தடைவிதிக்கப்படுகிறது. எதிர்காலத்திலும் அவர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யக்கூடாது" என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இதி குறித்து ப்ரியா பிரகாஷ் வாரியர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "திரைத்துறைக்குள் அடிஎடுத்துவைக்கும்போதே சர்ச்சைகளை எதிர்கொள்வது பதற்றத்தை அளிக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன்" எனக் கூறியுள்ளார்.