“கண்ணீர் வழிந்தது...” - அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர்கள் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை நிகழ்வில் கலந்துகொண்ட திரைப் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

பவன் கல்யாண்: “இன்றைய தினம் எனக்கு மிகவும் எமோஷனலானது. பிராண பிரதிஷ்டையின்போது என்னை அறியாமலேயே என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இந்த நாட்டில் நிலவி வந்த நூற்றாண்டு கால ஏக்கமும் இறுதியாக இன்று நிறைவேறியுள்ளது. இது பாரதத்தை ஒரு தேசமாக வலுப்படுத்தி ஒருங்கிணைத்துள்ளது” என்றார்.

ராம்சரண்: “கோயிலுக்கு வந்து நிகழ்வில் கலந்துகொண்டு ராமரிடம் ஆசீர்வாதம் பெற்றேன். இந்த அனுபவம் மிகவும் சிறப்பாகவும், அழகாகவும் இருந்தது. வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கு வந்து இந்த இடத்தைக் காண்பது இந்தியாவில் பிறந்த நம் அனைவருக்கும் நிச்சயம் பெருமை சேர்க்கும். இது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம் தான்” என்றார்.

விவேக் ஓப்ராய்: “ராமர் என்னை உணர்ச்சிவசப்படுத்தினார். அவருடைய (ராம் லல்லா) வடிவம் அழகாக இருக்கிறது. சிற்பம் மிகவும் நன்றாக உள்ளது. நான் மிகவும் எமோஷனலாக உணர்ந்தேன்” என்றார்.

ஆயுஷ்மான் குர்ரானா: “இது ஒரு வரலாற்று தருணம். இந்த தருணத்தில் என்னை இங்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. எல்லோரும் இந்த இடத்தை நேரில் வந்து பார்க்க வேண்டும். மிகவும் அழகாக இருக்கிறது” என்றார்.

சிரஞ்சீவி: “இது ஒரு அற்புதமான அனுபவம். முழு இந்திய மக்களுக்காக உருவாக்கப்பட்ட நாள் இது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE