திரை விமர்சனம்: சலார்

By செய்திப்பிரிவு

தன் தாயின் அஸ்தியைக் கறைப்பதற்கு வெளிநாட்டில் இருந்து தந்தைக்குத் தெரியாமல், இந்தியா வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). அவர் வந்தால் கடத்திச் செல்ல பெரும் ரவுடிகள் இந்தியா முழுவதும் காத்திருக்கிறார்கள். தனது கூட்டாளியான பிலாலிடம் (மைம் கோபி) விஷயத்தைச் சொல்லி மகளைக் காப்பாற்றச் சொல்கிறார், ஆத்யாவின் தந்தை. அசாமில் தன் தாயுடன் (ஈஸ்வரி ராவ்) இருக்கும் தேவாவிடம் (பிரபாஸ்) அவரைக் காப்பாற்ற உதவி கேட்கிறார், பிலால். ஆத்யாவை தன் வீட்டிலேயே பாதுகாப்பாக வைக்கிறார் தேவா. ரவுடிகளுக்கு தேவா வீட்டில் ஆத்யா இருப்பது தெரியவர, அவருக்கு ‘கான்சார் முத்திரை’ குத்தி கடத்திச் செல்கிறார்கள். அவர்கள், நாடே பயப்படும் வரதராஜ மன்னார் (பிருத்விராஜ்) ஆட்கள் என்பது தெரிந்தும் அவர்களைப் போட்டுத் தாக்குகிறார், தேவா. கான்சார் என்றால் என்ன? அங்கு என்ன நடக்கிறது? நண்பர்களான தேவாவுக்கும் வரதாவுக்கும் என்ன நடந்தது என்பதுதான், ‘சலார்: பார்ட் 1 - சீஸ் ஃபயர்!’

கே.ஜி.எஃப் படங்களில் தனது புனைவு உலகத்தை வித்தியாசமாகப் படைத்திருந்த இயக்குநர் பிரசாந்த் நீல், ‘சலாரி’ல் வேறாரு புனைவு உலகைக் காண்பிக்கிறார். ‘கான்சார்’ என்ற அந்த நாட்டில் நடக்கும் பதவி வெறியும் அதன் பின் நடக்கும் சூழ்ச்சியும் அதிகார மோதலும் வன்முறையும்தான் கதைக்களம். அதற்கு அவருடைய முந்தைய படங்கைளப் போலவே லாஜிக் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தொழில் நுட்பத்தையும் ஆக்ஷைனயும் மட்டுமே நம்பி மிரட்டியிருக்கிறார். அது முதல் பாதி வரை ரசிக்கவும் பிரமிக்கவும் வைக்கிறது. பிரபாஸின் மாஸ் காட்சிகளுக்கு அப்ளாஸ்களும் கிடைக்கின்றன. ஆனால், பின்பாதியை விவரிக்கும் கதையின் நீளமும் ரத்தக்களறி சண்டைக் காட்சிகளும் ஒரு கட்டத்தில் பொறுமையை சோதித்து விடுகின்றன.

கான்சாரில் நடக்கும் வாக்கெடுப்பு, அடுத்தடுத்து வரும் கேரக்டர்களின் பின்னணி, அவர்களுக்கான ‘நிபந்தனை’ என விரிவைடயும் திரைக்கதை எழுத்து புதிதாக இருந்தாலும் அது ஆக்ஷேனாடு மட்டுமே நின்றுவிடுவதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிருத்விராஜ் இதில் இரண்டாவது நாயகனாகவே வருகிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் அவர் தான் அடுத்த பாகத்தில் வில்லன் என்பதற்கு இதில் லீட் இருக்கிறது. கதாநாயகன் பிரபாஸ் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். அவருக்கான பில்டப்பும் தோற்றமும் உடல்மொழியும் அதற்கு அழகாகப் பொருந்துகிறது. ஆனால், சென்டிமென்ட் காட்சிகளிலும் அதே எக்ஸ்பிரஷன்! ஸ்ருதிஹாசனுக்கு அதிக வேலையில்லை.

பிரபாஸின் நண்பராக மைம் கோபி, அம்மாவாக ஈஸ்வரி ராவ், மன்னாராக ஜெகபதிபாபு, அவர் மகளாக ஸ்ரேயா ரெட்டி மற்றும் தேவராஜ், ராமச்சந்திர ராஜு, ஜான் விஜய், பாபி சிம்ஹா, ரமணா என படத்தில் நிறைய நட்சத்திரங்கள். அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு, பிரசாந்த் நீலின் பிரம்மாண்டத்தைக் காட்சிகளின் வழியே பிரமிப்பாக கடத்துகிறது. அந்த கலர் டோனும் காட்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. ரவி பஸ்ரூரின் பின்னணி இசை 'கேஜிஎஃப்'பை அவ்வப்போது ஞாபகப்படுத்தினாலும் ஆக்ஷன் படத்துக்கான பதற்றத்தை அள்ளிக் கொகாடுக்கிறது.

அன்பறிவ் மாஸ்டர்களின் ‘ஆக்ஷன் கோரியாகிராபி’, உஜ்வால் குல்கர்னியின் முன்னும் பின்னுமான படத்தொகுப்பு, கலை இயக்கம் உட்பட டெக்னிக்கலாகவும் ‘மேக்கிங்’கிலும் சலார் மிரட்டுகிறது. ஆனால், அது மட்டும் போதுமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE