“இது ஒரு கனவுப் பயணம்” - ஆஸ்கர் ரேஸில் ‘2018’ வெளியேறியது குறித்து இயக்குநர் உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆஸ்கர் ரேஸிலிருந்து மலையாள படமான ‘2018’ வெளியேறியுள்ள நிலையில், “இது ஒரு கனவு பயணம்” என படத்தின் இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் வணக்கம். ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் படங்களின் இறுதி பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 88 சர்வதேச மொழித் திரைப்படங்களில் 15 படங்கள் இறுதி செய்யப்பட்டன. இதில் ‘2018’ படம் இடம்பெறவில்லை என்பது வருந்தத்தக்கது. உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்காக எனது நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இருப்பினும், இந்தப் போட்டியில் இந்தியாவை பிரநிதித்துவப்படுத்த எனக்கு கிடைத்த இந்தக் கனவு பயணத்தின் வாய்ப்பை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன். அதிக வசூல் செய்த திரைப்படம் மற்றும் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ படம் என்ற பெருமை ஒவ்வொரு இயக்குநரின் வாழ்க்கையிலும் நிகழ வேண்டும் எதிர்பார்க்கும் அரிய சாதனையாகும். இந்தப் பயணத்துக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். படத்தின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இறுதியில், “எனது அடுத்த கனவின் ஆரம்பம் இன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருதுகள் காத்திருக்கின்றன. நான் கலந்துகொள்ள தயாராக இருக்கிறேன்” என நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார். 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தப் பிரிவில் 15 படங்கள் இறுதிப் பரிந்துரையில் இடம்பெற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ‘2018’ படம் இடம்பெறவில்லை. ஆனால், ஜார்க்கண்ட் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கை அடிப்படையாகக் கொண்ட 'டு கில் எ டைகர்' (To Kill A Tiger) என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப் படப் பிரிவின் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிஷா பஹுஜா இதை இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE