கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ - அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘கேஜிஎஃப்’ படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பெரும் பிரபலமடைந்த யஷ், தனது அடுத்த படத்தின் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், யஷ் நடிக்கும் 19வது படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் இப்படம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE