2 நண்பர்களின் கதை ‘சலார்’: பிரசாந்த் நீல் தகவல்

By செய்திப்பிரிவு

யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து இயக்கியுள்ள படம், ‘சலார்; பார்ட் 1- சீஸ்பயர்’. கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், பிருத்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஜெகபதிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். டிச. 22-ம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் பற்றி பிரசாந்த் நீல் கூறியதாவது:

எதிரிகளாகிவிட்ட இரண்டு நண்பர்களின் கதைதான் ‘சலார்’. நண்பர்களின் இந்தப் பயணத்தை இரண்டு படங்களில் காட்ட இருக்கிறோம். ஒரு பாதி கதையை மட்டும் இதில் சொல்கிறோம். இதில் நட்பு முக்கிய விஷயமாகக் காட்டப்படும். டிச.1-ம் தேதி இதன் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. அதில் நாங்கள் உருவாக்கி இருக்கும் உலகத்தைப் பற்றிய பார்வையை ரசிகர்கள் பெறுவார்கள். கே.ஜி.எஃப் படமும் இதுவும் வெவ்வேறு கதைகளைக் கொண்டது. சலாரில் இன்னொரு கே.ஜி.எஃபை ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடாது. ‘சலார்’ தனிக்கென ஓர் உலகத்தைக் கொண்டிருக்கிறது. அதற்குத் தனியான உணர்வும் கதாபாத்திரங்களும் உண்டு. பிரபாஸ் இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பாவித்தனமும் ஆக்ரோஷமும் கலந்த தனித்துவமான கலவையை அவரிடம் பார்க்கிறேன். அதை இந்தப் படத்தில் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE