படப்பிடிப்பில் கடும் மோதல்; ஒளிப்பதிவாளர் திடீர் நீக்கம்: குண்டர்கள் மிரட்டுவதாக போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

கொச்சி: மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, வைபவ் நடித்த ‘பபூன்’ படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ‘பனி’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில், அபிநயா, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, ஆபிரகாம் உட்பட பலர் நடிக்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளரான வேணு இதில் பணியாற்றி வந்தார். இவர் தமிழில், கமலின் ‘குணா’, ராஜிவ் மேனனின் ‘மின்சார கனவு’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு மாதமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் வேணு அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜோஜு ஜார்ஜுக்கும் வேணுவுக்கும் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் வேணுவை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரை வைத்து படத்தைத் தொடங்கியுள்ளார் ஜோஜு. இந்நிலையில் தனக்குக் குண்டர்கள் மிரட்டல் விடுப்பதாக திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஒளிப்பதிவாளர் வேணு புகார் அளித்துள்ளார். போலீஸார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE