நெருப்பு சூழ் பின்புலத்தில் மோகன்லால் - ‘எம்புரான்’ பட முதல் தோற்றம்

By செய்திப்பிரிவு

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். ‘லூசிஃபர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார்.

அதன்படி இரண்டாம் பாகத்துக்கு ‘எம்புரான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சினிமாவாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் தோற்றம் எப்படி? - கையில் துப்பாக்கியுடன் திரும்பி நின்றுகொண்டிருக்கும் மோகன்லாலுக்கு எதிரே ஹெலிகாப்டரும், சுற்றி நெருப்பும் பற்றி எரிகிறது. கிட்டத்தட்ட போர்களக் காட்சிகள் போன்ற சூழலை அடிப்படையாக கொண்டு போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இருந்த அரசியல் கதையின் நீட்சியா அல்லது முற்றிலும் வேறொரு கதைக்களமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE