ஹைதராபாத்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உட்பட சிலரை சில நாட்களுக்கு முன், ஹைதராபாத்தில் போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகர் நவ்தீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரைத் தேடி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பானது. இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் நடிகர் நவ்தீப்பிடம் விசாரணை நடத்தினர். அவரின் செல்போனை சோதனை செய்தனர். அதில் வாட்ஸ் அப், மெசேஜ் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன. அதை மீட்க தடயவியல் ஆய்வுக்கு செல்போன் அனுப்பப்பட இருக்கிறது.
இதற்கிடையே விசாரணை முடிந்து வந்த நவ்தீப் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த வழக்கில் பிரதான சந்தேக நபரான ராம்சந்தரை எனக்குத் தெரியும். அதனால்தான் விசாரித்தனர். 6, 8 வருடங்களுக்கு முன் நடந்த தொலைபேசி அழைப்புகள் உட்பட பழைய வழக்கு தொடர்பான விவரங்களைக் கேட்டனர். அவர்கள் சுமூகமாக விசாரித்தார்கள். நான் தெளிவாகவும் மகிழ்ச்சியாகவும் பதிலளித்தேன்” என்றார்.