ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.
’சலார்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை படக்குழு சமீபத்தில் மறுத்தது. வெளியீட்டுத் தேதியில் எந்தவித மாற்றமுல் இலலை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ’சலார்’ படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை தள்ளிவைத்துள்ளதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முடியாததால் படத்தின் வெளியீடு தாமதமாவதாக கூறப்படுகிறது.
» நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் - நெல்லையில் திருமணம் முடிந்தது
» “என் புதிய படத்துக்கு ரஹ்மான் இசை அமைக்கவில்லையே தவிர...” - பார்த்திபன் பகிர்வு