ஹைதராபாத்: ’பாகுபலி’ படத்துக்குப் பிறகான இந்த இடைவெளி தனக்கு மிகவும் தேவைப்பட்டது என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள படம், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. நவீன் பொலிஷெட்டி, முரளி சர்மா, நாசர், துளசி, ஜெயசுதா உட்பட பலர் நடித்துள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் கடந்த 7ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் வெளியானது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றியது குறித்து அனுஷ்கா மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ’பாகுபலி’ படத்துக்கு பிறகு ‘பாகமதி’ படத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு சுயவிருப்பத்தோட ஓய்வை எடுத்துக் கொண்டேன். அந்த கட்டத்தில் அது எனக்கு மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. எதிர்கால படங்களுக்கு என்னை தயார் செய்ய அந்த இடைவெளி அவசியமானது என்று உணர்ந்தேன். அது வழக்கமான பாதை இல்லை எனினும் அதுதான் எனக்கு மிகவும் தேவைப்பட்டது. அந்த காலகட்டத்தில் நான் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது தொடர்ந்து கதைகளை கேட்டு வருகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் எந்த மொழியாக இருந்தாலும் நடிப்பேன்” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.