மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா படம், ‘விருஷபா’. இதை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார். இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.வி.எஸ் ஸ்டுடியோ சார்பில் அபிஷேக் வியாஸ், பர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ் சார்பில் ஷியாம் சுந்தர், பாலாஜி டெலிபிலிம்ஸ் சார்பில் ஏக்தா கபூர், கனெக்ட் மீடியாவுக்காக வருண் மாத்தூர் இணைந்து தயாரிக்கின்றனர். பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மைசூருவில் தொடங்கியது.
மோகன்லால் உட்பட படக்குழுவினர் இதில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் 3000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளதாக நடிகை நேகா சக்ஸேனா தெரிவித்துள்ளார். பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது. மிகப்பெரிய அரங்கில் இவ்வளவு துணை நடிகர்களுடன் நடித்தது ஆச்சரியம் அளித்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேகா சக்ஸேனா தமிழில், ‘லொடுக்கு பாண்டி’, ‘ஒரு மெல்லிய கோடு’, ‘வன்முறை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.