டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு 1 வருட சிறை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ‘இதுதான்டா போலீஸ்’ டாக்டர் ராஜசேகர். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் மனைவி நடிகை ஜீவிதா. இவர்களுக்கு 2 மகள்கள். இருவரும் நடித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார். அவர் நடத்தும் ரத்த வங்கிக்குத் தானமாக வழங்கப்படும் ரத்தம், வெளியில் விற்பனை செய்யப்படுவதாகக் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் ராஜசேகரும் ஜீவிதாவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.

இதையடுத்து சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி அறக்கட்டளை மற்றும் அவர் பெயரில் நடக்கும் ரத்த வங்கி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜசேகரும் ஜீவிதாவும் கூறியதாக, ஹைதராபாத் நாம்பள்ளி 17- வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

12 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் சுபா நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கினார். அதன்படி சிரஞ்சீவியின் அறக்கட்டளையைத் தவறாகப் பேசியது நிரூபணம் ஆனதால் ராஜ சேகர்- ஜீவிதா தம்பதிக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டியதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE