பிருத்விராஜின் ‘டைசன்’ மூலம் மலையாளத்தில் அனிருத் அறிமுகம்?

By செய்திப்பிரிவு

நடிகர் பிருத்விராஜ் இயக்கும் ‘டைசன்’ படம் மூலம் அனிருத் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் ‘ஆடுஜீவிதம்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து அவர் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் ‘டைசன்’ படத்தை இயக்க உள்ளார். ஆக்‌ஷன் - த்ரில்லராக உருவாகும் இப்படத்துக்கு முரளி கோபி திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், அனிருத் இசையமைப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாகவும், இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா கலந்துகொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

அனிருத்தை பொறுத்தவரை அவர் மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படத்தில் ‘பாட்டொன்னு பாடப்போறேன்டா’ என்ற பாடலை பாடியிருந்தார். ஆனால், இதுவரை மலையாள படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை. தமிழில், விஜய்யின் ‘லியோ’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, ரஜினியின் ‘ஜெயிலர்’, தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’, இந்தியில் ஷாருக்கானின் ‘ஜவான்’ ஆகிய முன்னணி படங்களில் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE