ஜிஎஸ்டி வரி குறித்து பிரதமரிடம் ரஜினி - கமல் பேச வேண்டும்: ப்ரேமம் இயக்குநர் வேண்டுகோள்

By ஸ்கிரீனன்

ஜிஎஸ்டி வரி குறித்து பிரதமரிடம் ரஜினி மற்றும் கமல் பேச வேண்டும் என்று 'ப்ரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சமீபத்தில் புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதில் சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கிறது. இது குறித்து பல்வேறு திரையுலகினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்.

இந்தப் பிரச்சினை குறித்து 'ப்ரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துக்கு என் சந்தேகங்கள்

1 . ஏன் ஜிஎஸ்டியில், சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கின்றன?

2 . எப்படி சினிமாவும் சூதாட்டமும் ஒன்றாகும்?

3 . தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா? அல்லது மூணு சீட்டு போல சீட்டாட்டம் விளையாடினால் சினிமா எடுத்துவிட முடியுமா?

4 . தாயம் உருட்டவும், சீட்டுகளை குலுக்கவும் எடுத்துக்கொள்ளும் நேரமும், முயற்சியும், ஒரு திரைப்படம் எடுப்பதற்காக செலவிடப்படும் நேரமும் முயற்சியும் ஒன்றாகிவிடுமா?

தமிழ் சினிமா துறையில் நீங்கள்தான் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகள். பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்ஜெட்டில் இருக்கும் இந்த சிறிய தவறைப் பற்றி பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பேச்சுவார்த்தை மொத்த திரைத்துறையையும், ரசிகர்களையும் காப்பாற்றும்.

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE