'எக்ஸ்ட்ராக்ஷன்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை உருவாக்கி வருவதாக ஜோ ருஸ்ஸோ தெரிவித்துள்ளார்.
'தோர்' உள்ளிட்ட மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் 'எக்ஸ்ட்ராக்ஷன்' என்ற படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகமுறை பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இப்படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ள ஜோ ருஸ்ஸோ கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஜோ அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
» மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம்? - இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு விளக்கம்
» சென்னையிலிருந்து தேனி பயணம்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா
'எக்ஸ்ட்ராக்ஷன்' இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இப்படத்தின் கதை முன்னோக்கி பயணிக்குமா இல்லை பின்னோக்கி பயணிக்குமா என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கான முடிவை பார்வையாளர்களிடமே விட்டிருந்தோம். இப்போதைக்கு கதை உருவாக்கத்தில் கவனம் செலுத்திவிட்டு பின்பு அதை முழுமை செய்து க்றிஸ் ஹெம்ஸ்வொர்த்திடம் காட்டவேண்டும்.
இவ்வாறு ஜோ ருஸ்ஸோ கூறியுள்ளார்.
அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருஸ்ஸோ ப்ரதர்ஸ் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் ரந்தீப் ஹோண்டா, பங்கஜ் த்ரிபாதி, பியான்ஷு பைன்யுல்லி, ருத்ராக்ஷ் ஜைஸ்வால் உள்ளிட்ட இந்திய நடிகர்களும் நடித்துள்ளனர்.