25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் செல்லும் ஜோதிகா

By செய்திப்பிரிவு

மும்பை: அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நடிகை ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் இப்படம் சோபிக்கவில்லை.

இப்படத்துக்குப் பிறகு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் ஒன்றை தயாரித்து நடிக்கிறார். ‘குயின்’, ‘சூப்பர் 30’, ‘குட் பை’ உட்பட பல படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கனுடன் நடிகர் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

இந்த நிலையில் இப்படத்தில் நடிகை ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். கடைசியாக 1998ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் அக்‌ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். தற்போது அஜ்ய தேவ்கன் - மாதவன் நடிக்கும் இப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார் ஜோதிகா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE