பிரபல இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. தமிழில், ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘பம்பாய்’, ‘ பாபா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, தனுஷின் ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘ஹீராமண்டி’ எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார்.
தனது 32 வருட சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறும்போது, “இன்று நான் வெற்றிகரமாக இருப்பதற்கு இந்தத் தொழிலின் மீதான காதல்தான் காரணம். சினிமாவையும் நடிப்பையும் அதிகம் விரும்புகிறேன். சினிமா ஆணாதிக்கம் நிறைந்ததுதான். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் படங்கள் உருவாக்கப்படுகின்றன. அதனால் நடிகைகளுக்குத் தங்களை நிரூபிக்க குறைந்த வாய்ப்புகளே கிடைக்கின்றன. ஆனால் சஞ்சய் லீலா பன்சாலி விதிவிலக்கு. அவர் இயக்கத்தில் 25 வருடத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. படத்துக்கு படம் அவர் தன்னை மெருகேற்றிக் கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.