தமிழ்நாட்டில் இன்று முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன. இப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் கடந்த மே 5ஆம் தேதி சென்னையில் உள்ள 13 மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்களில் மட்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானது. திரையரங்கங்களின் முன்னால் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்த நிலையில், இன்று (மே 07) முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. தொடர் போராட்டம் மற்றும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது, எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேரள மாநிலத்திலும் பல்வேறு மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் இப்படத்தின் காட்சிகளை நேற்று ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.