சல்மான் கான் கவலைப்பட வேண்டாம்; நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது: கங்கனா ரனாவத்

By செய்திப்பிரிவு

நாடு பாதுகாப்பான கைகளில் இருப்பதால் தனது பாதுகாப்பு குறித்து நடிகர் சல்மான் கான் கவலைப்பட வேண்டாம் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து தொடர் கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு மும்பை காவல்துறை சார்பாக Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மும்பை போலீசாரின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ராஜஸ்தானிலிருந்து அழைத்த மர்ம நபர் ஒருவர், தன் பெயர் ராக்கி பாய் எனவும், விரைவில் சல்மான் கானை கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.

இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான், தன்னை சுற்றி பல துப்பாக்கிகள் இருப்பதால், தனக்கு இப்போதெல்லாம் மிகவும் பயமாக இருப்பதாக கூறியிருந்தார். சல்மான் கானின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், ‘நாங்களெல்லாம் நடிகர்கள். சல்மான் கானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடமிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளதால் அவர் எதற்கும் பயப்படத் தேவையில்லை. எனக்கு மிரட்டல் வந்தபோது கூட மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு வழங்கியது. இன்று நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. நாம் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE