நடிகர் அர்ஜுன் ராம்பால், ஒருவரது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும்போது, அதில் சமநிலை பேணுவது முக்கியம் என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 8 அன்று திரைக்கு வரும் ‘டாடி’ படத்தில், நிஜவுலக மும்பை டான் அருண் காலி வேடத்தில் அர்ஜுன் ராம்பால் நடித்துள்ளார். அருண் மனைவி ஆஷா காலி வேடத்தில் தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து பேசிய அர்ஜுன், "அருண் இன்னும் உயிரோடு இருக்கிறார். உயிரோடு இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் கதையை படமாக்குவது இது முதல் முறை என நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் அருண் காலியின் பார்வையை மட்டுமே நாங்கள் காண்பிக்கவில்லை. ஏனென்றால் ஒருவரது வாழ்க்கையை படமாக எடுக்கும்போது சொல்லும் விஷயம் ஒருதலை பட்சமாக இருக்கக் கூடாது. அதுதான் மிக முக்கியமானதாக இருந்தது.
என்னைப் பொறுத்தவரையில், அருண் பல பிரச்சினைகளை சந்தித்த ஒரு மனிதர். படம் பார்க்கும்போது அவர் மீது இரக்கம் வரலாம். ஆனால் அவரது இருண்ட பக்கமும் படத்தில் இருக்கும். பல்வேறு பரிமாணங்களைப் பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்