“எனது படங்கள் ஓடாததற்கு நானே பொறுப்பு; ரசிகர்கள் அல்ல” - நடிகர் அக்‌ஷய் குமார் 

By செய்திப்பிரிவு

தனது படங்கள் சரியாக ஓடாததற்கு தான் தான் பொறுப்பு என்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற வேண்டிய அவசியம் தனக்கு உள்ளது என்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் அக்‌ஷய் குமாரின் ‘செல்ஃபி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.2.50 கோடியை மட்டுமே வசூலித்தது மோசமான தொடக்கமாக அமைந்தது. இந்நிலையில் தனது படங்கள் குறித்து வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டியளித்துள்ளார். அதில், “இப்படி நடப்பது எனக்கு முதன்முறையல்ல. என்னுடைய கரியரில் ஒரேநேரத்தில் 16 தோல்விப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஒரு காலத்தில் 8 படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளன. படங்கள் வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம். எனது தவறு தான் காரணம். பார்வையாளர்கள் மாறிவிட்டனர். நானும் மாற வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாம் நம்மை மாற்றியாகவேண்டும். மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் வழக்கமானதைத் தாண்டி வேறொன்றை எதிர்பார்க்கிறார்கள்.

படம் ஓடவில்லை என்றால் அது எனது தவறு மற்றும் எனக்கான எச்சரிக்கை. தொடர்ந்து படங்கள் தோல்வியடைகிறதென்றால் நாம் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான அலராம் தான் அது. நான் மாற முயல்கிறேன். இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்தது அதுதான். ரசிகர்களையும், மற்றவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க என்னுடைய தவறு தான். படம் ஓடவில்லை என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் அல்ல. காரணம் எனது விருப்பத்தேர்வு தான். ஒருவேளை எனது படங்களில் சரியான அம்சங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்” என அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE