நடிகை டாப்ஸி இப்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பிரபல பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரைக் கடந்த 9 வருடங்களாகக் காதலித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தித் திரையுலகில் அவருடன் நடிக்கும் கேத்ரினா கைஃப், ஆலியா பட், யாமி கவுதம், கியாரா அத்வானி ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். டாப்ஸி எப்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று கேட்டபோது அவர் கூறியதாவது: என் சமகால நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு, பெற்றோராகி வருகிறார்கள். எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நான் காதலிக்கத் தொடங்கினேன். இன்னும் அவரையே காதலித்து வருகிறேன். இதை ஒப்புக்கொள்ள தயங்கவில்லை.
எனக்கு எந்தப் போட்டியும் இல்லை. இயல்பாகச் செல்லும் இந்த வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால் என் காதல் வாழ்க்கை பற்றிப் பேசுவதை விரும்பவில்லை.
இப்போது ‘டுங்கி’ படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கிறேன். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இதில் சும்மா ஒரு மரத்தைப் போல நின்றால் போதும் என்று சொன்னால் கூட செய்திருப்பேன்.
ஏனென்றால், ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் நான் இருக்கிறேன் என்பதே பெருமை. இந்தப் படத்தில் அழகான காதல் இருக்கிறது. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன். இருவரிடம் இருந்தும் கற்றுக்கொண்ட புதிய விஷயங்களுடன் தினமும் வீட்டுக்கு வருகிறேன். இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.