‘‘சந்திரமுகியில் ஜோதிகா நடித்ததைப் போல நடிப்பது சாத்தியமற்றது” - கங்கனா ரனாவத் புகழராம்

By செய்திப்பிரிவு

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பை தரக்கூடியது; அதுபோல் நடிப்பது சாத்தியமற்றது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

‘சந்திரமுகி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பி.வாசு இயக்குகிறார். இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா பேசிய காணொலியை மேற்கோள் காட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த காணொலியில் ஜோதிகாவிடம், ‘பாலிவுட்டில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேட்க’ அதற்கு அவர், ‘கங்கனா ரனாவத்’ என பதிலளித்திருப்பார். இந்த காணொலியை மேற்கோள்காட்டியுள்ள கங்கனா, “இது எனக்கு ஊக்கமளிக்கிறது. சந்திரமுகி படத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய மிகச்சிறந்த நடிப்பை தற்போது நாள்தோறும் நான் பார்த்து வருகிறேன். ஏனென்றால், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை நாங்கள் படமாக்கி வருகிறோம். சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பை அளிக்கக்கூடியது. அவருடைய நடிப்பை ஈடு செய்துவது சாத்தியமற்றது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE