இதுவரை ரூ.250 கோடி - பாலிவுட்டில் 2022-ல் அதிக வசூலை குவித்து ‘பிரம்மாஸ்திரா’ சிறப்பிடம்

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான படங்களிலேயே ரன்பீர் கபூரின் ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் அதிக வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன்முகர்ஜி உள்ளிட்டோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டது. ஷாருக்கான், அமிதா பச்சன், நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படத்திற்கு ப்ரித்தம் இசையமைத்திருந்தார்.

சுமார் ரூ.410 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. உலக அளவில் 8,913 திரைகளில் படம் வெளியானது. இந்தியாவை பொறுத்தவரை 5,019 திரைகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். இந்திய அளவில் படம் ரூ.36 கோடி - ரூ.38 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாலிவுட்டில் இந்தாண்டு வெளியான படங்களிலேயே 'பிரம்மாஸ்திரா' அதிக வசூலை ஈட்டிய படமாக கருதப்படுகிறது.

படம் வெள்ளிகிழமை 9-ம் தேதி வெளியாகி ஞாயிற்றுகிழமை 12-ம் தேதி வரையில் உலக அளவில் ரூ.225 கோடியை வசூலித்தாக படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான அயன்முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

வாரத்தின் தொடக்க நாளான 12, 13 ஆகிய தேதிகளை சேர்த்து படம் இதுவரை உலக அளவில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல படம் வெளியான 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை எட்டியது. அந்த வகையில் தற்போது வரை இந்தியாவில் ரூ.150 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த வெளியான பாலிவுட் படங்கள் வசூலில் நிகழ்த்தாத சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது என திரைவர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.150 கோடிக்கு வாங்கியுள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE