“இது எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரியாது” - நிர்வாண புகைப்படம் குறித்து ரன்வீர் சிங்

By செய்திப்பிரிவு

'எனது நிர்வாண புகைப்படங்கள் எனக்கு இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தெரியாது' என்று காவல் துறையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய நிர்வாணமாக புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். பாப் கலாசாரத்தின் அடையாளமும் நடிகருமான பர்ட் ரெனால்ட்ஸுக்கு இந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்தார். ரன்வீர் சிங்கின் இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மறுபுறம் சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பியது.

அப்போது பேசிய அவர், ’நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக இருக்க தயங்க மாட்டேன். ஆனால், என் முன்னால் இருப்பவர்கள் அசெளகரியம் அடைகிறார்கள் என்பது தான் உண்மை’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பாக என்ஜிஓ சார்பில் ரன்வீர் சிங் மீது புகாரளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இது போன்ற நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததற்காக நடிகர் ரன்வீர் சிங் காவல் நிலையத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் கொடுக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று நேற்று செம்பூர் காவல் நிலையத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இதுபோல நிர்வாண புகைப்படங்கள் எடுத்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து அவரிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது காவல் துறையினரிடம் 'எனது நிர்வாண புகைப்படங்கள் எனக்கு இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தெரியாது' என ரன்வீர் சிங் தெரிவித்தததாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE