“மக்கள் விழித்துக் கொண்டனர்” - ஆமிர்கான் மீது விஜயசாந்தி ஆவேசம்

By செய்திப்பிரிவு

''இந்த நாடு மத நல்லிணக்கத்துடன் அனைவரையும் மதிக்கிறது'' என ஆமிர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தின் எதிர்ப்பு விவகாரத்தில் முன்னாள் எம்.பியும், பாஜகவைச் சேர்ந்தவருமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.

ஆமிர்கானும், கரீனாகபூரும் தங்கள் நடிப்பில் வெளியாக உள்ள 'லால் சிங் சத்தா' படத்திற்கான ப்ரமோஷனில் பிசியாக உள்ளனர். ஹாலிவுட்டில் வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை தழுவி உருவாக்கப்படும் இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. படத்தின் ப்ரமோஷனுக்கு இடையில், 'லால் சிங் சத்தாவை புறக்கணிக்க வேண்டும்' (boycott Laal Singh Chaddha) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவியது.

இந்த எதிர்ப்புக்கு ஆமிர்கான் பதிலளித்தும் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர், ''ஆமாம். உண்மையில் நான் இது குறித்து வருத்தப்படுகிறேன். இப்படியான பிரச்சாரத்தை பரப்பும் சிலர், இதயபூர்வமாக நான் நாட்டை நேசிக்கவில்லை என நம்புகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால், அது உண்மைக்குப் புறம்பானது. சிலர் அப்படி நினைப்பது துரதிர்ஷ்டவசமானது. அப்படி இல்லை. தயவுசெய்து என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து என் படத்தைப் பாருங்கள்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி, ஆமிர்கானை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''2015 ஆம் ஆண்டில் இந்தியா சகிப்புத்தன்மையற்றதாக மாறிவிட்டதாக கூறிய அமீர்கான் அப்போதைய தனது மனைவி கிரண் ராவுடன் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேற விரும்பினார். இந்தியாவில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் பெரிய பதவிகளைப் பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பும், பின்பும், இன்றும் இந்த நாடு மத நல்லிணக்கத்துடன் அனைவரையும் மதிக்கிறது. பாலிவுட்டில் ஆமிர் உட்பட உரிய மரியாதையைப் பெற்று வரும் கான் மூவரும் இதற்கு ஒரு பெரிய உதாரணம். ஆனால், உண்மையை அறிந்தவர்கள் ஆமிரின் கருத்தை நிராகரித்துள்ளனர்.

ஆமிர்கானின் பிகே திரைப்படம் இந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்துக் கடவுள்களை இழிவுப்படுத்திய படம். அப்போது இந்து அமைப்புகள் பிகேவை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். தற்போது 'லால் சிங் சத்தாவை புறக்கணிக்க வேண்டும்' (boycott Laal Singh Chaddha) என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE