‘ஏதேனும் நடந்தால் நானா படேகர் பொறுப்பு’ - ட்விட்டரில் நடிகை தனுஸ்ரீ தத்தா பதிவு

By செய்திப்பிரிவு

மும்பை: தமிழில், விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர், ’ஹார்ன் ஓகே பிளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மீ டூ வில் புகார் கூறியிருந்தார்.

நானா படேகர், தமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’, ரஜினியின் ‘காலா’ படங்களில் நடித்துள்ளார். போலீசார் விசாரித்து நானா படேகருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்று கூறி வழக்கை முடித்தனர். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தனுஸ்ரீ தத்தா. நானா படேகரும் அவர்மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன், ‘‘நான் குறிவைத்து துன்புறுத்தப்படுகிறேன்’’ என்று தனுஸ்ரீ கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு, நடிகர் நானா படேகர், அவரது வழக்கறிஞர்கள் மற்றும் அவருடைய மாஃபியா நண்பர்கள்தான் பொறுப்பு. பாலிவுட் மாஃபியா என்றால் சுஷாந்த் சிங் மரணத்தின்போது சிலரின் பெயர்கள் அடிக்கடி வெளிவந்ததே, அவர்கள்தான். என்னை அதிகமாகத் துன்புறுத்திய அவர்களின் வாழ்க்கையை நரகமாக்குங்கள். சட்டம் துணை நிற்காமல் போனாலும், மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஜெய்ஹிந்த், இவ்வாறு தனுஸ்ரீ கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE