நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.
தமிழில் கடந்த 1997-இல் வெளியான 'ரட்சகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுஷ்மிதா சென். அதிகளவில் இந்தி மொழி படங்களில் தான் இவர் நடித்துள்ளார். 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். 46 வயதாகும் இவர் இதுநாள் வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. சில தினங்கள் முன், நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செய்துவருவதாக செய்திகள் வெளியாகின.
இருவரும் வெளிநாடுகளில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை லலித் மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இது வைரலாகி பேசுபொருளாக மாறியது.
ஆனால், சுஷ்மிதா சென் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஒரு பதிவை இட்டுள்ளார். தனது வளர்ப்பு மகள்கள் இருவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "நான் மகிழ்ச்சியான ஓர் இடத்தில் இருக்கிறேன். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. திருமணத்தின் அடையாளமாக எனது விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றி அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது அவ்வளவுவே. தற்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். இதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.