ரூ.25 லட்சம் மாத சம்பளத்திற்கு மனைவியாக இருக்கும்படி தொழிலதிபர் ஒருவர் கூறியதாக நடிகை நீது சந்திரா கலங்கியபடி தெரிவித்துள்ளார்.
தமிழில் 'யாவரும் நலம்', 'தீராத விளையாட்டு பிள்ளை', 'யுத்தம் செய்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை நீது சந்திரா. அவர் அண்மையில் 'பாலிவுட் ஹங்கமா' செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள நேர்காணலில், ' ஒரு வெற்றிகரமான நடிகையில் தோல்விக் கதை தான் என்னுடையது.
13 தேசிய விருது பெற்றவர்களுடன் பெரிய படங்களில் பணியாற்றிய நான் இன்று வாய்ப்பு ஏதும் இல்லாமல் இருக்கிறேன். ‘ஒரு பெரிய தொழிலதிபர் என்னிடம் வந்து, மாதம் 25 லட்சம் ரூபாய் தருகிறேன். மனைவியாக இருக்க ஒப்புக்கொள்கிறாயா?’ என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.
இப்போது என்னிடம் பணமோ, வேலையோ இல்லை. மிகவும் பிரபலமான இயக்குநர் ஒருவர் என்னை ஆடிஷனுக்கு அழைத்தார். ஒரு மணி நேரத்தில் என்னை நிராகரித்துவிட்டார். அதாவது என்னை நிராகரிக்கத்தான் அவர் என்னை ஆடிஷனுக்கு அழைத்தார். அதனால் என் நம்பிக்கை உடைந்து விட்டது. இதற்கு முன்பு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்கூட பல முறை எனது மனதில் வந்து சென்றது'' என்று உருக்கமாக அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.